த்ரிவிக்கிரமன்

Tuesday, February 08, 2005

மகள்: அப்பா ஒரு கதை கூறுகிறேன் என்றீர்கள்......
தந்தை: ஆம் ஒரு சுவாசரியமான கதை......இந்த கதை கேனோபநிஷத் எனும் உபநிஷத்தில் மூன்று மற்றும் நான்காம் காண்டத்தில் வருகிறது. பிரம்மத்தை பற்றிய கதை. ஒரு சமயம் மேலோகத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே கடுமையான போர் நிகழ்ந்தது. ஒரு சமயத்தில் அசுரர்களின் கை ஓங்கியிருந்த சமயத்தில் பரம்பொருளான அந்த பிரம்மம் தனது சக்தியை வெளிபடுத்தி தேவர்களின் பக்கமிருந்து வெற்றியை தேவர்களுக்கு ஈட்டுச்சென்றது.
மகள்: அப்பா பிரம்மம் என்றால் என்ன? அது எவ்வாறு இருக்கும்?
தந்தை: என்ன நீ அதற்குள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டாய்., சரி பிரம்மம் என்பது பரமேஸ்வரன் அந்த நாராயணனே தான். அவன் கண்ணுக்கு புலப்படமாட்டான். அவ்வளவு சூஷ்மமானது. அந்த நாரணன் தங்கள் பக்கமிருந்துதான் தாம் வெற்றி பெற்றோம் என்பது அறியாமல் தேவர்கள் தங்கள் சக்தியால்தான் வெற்றிபெற்றோம் என்று மிதப்பில் ஆழ்ந்திருந்தனர். பரமேஸ்வரன் யோசித்தான் தேவர்களுடைய ஆணவம் அவர்களுக்கு முன்னேற்றத்தை தராது அவர்களை திருத்த வேண்டும் என்று எண்ணம் கொண்டு ஒரு அழகிய கந்தருவ வேடம் கொண்டு தேவர்கள் முன் நின்றான். தேவர்கள் திகைப்புற்றனர், யாரடா இது புது வடிவாயிருக்கிறதே என்று குழம்பிப்போய் அக்கினியை நாடினர். அக்கினியும் அந்த இயக்க வடிவத்திடம் யார் என்று கேட்டான். அதற்கு அந்த இயக்கன் நீ யார் என்று திரும்பி கேட்டான். அதற்கு அக்கினி நான் அக்னி தேவன் என்னை 'ஜாதவேதஸ்' என்று அழைக்கும் அளவுக்கு பிரசித்தி பெற்றவன். என்று கூறியதும், இயக்கன் உடனே அவ்வளவு பிரசித்தி பெற்ற உன்னிடம் என்ன திறமை உள்ளது? என்று கேட்டதும் அக்கினி நான் எல்லா வடிவிலுமிருக்கிறேன் நான் இருக்கும் எவற்றையும் எரித்துவிடுவேன்., உடனே இயக்கன் எங்கே இந்த வைக்கோலை எரி பார்ப்போம் என்றதும் அக்கினி தன் முழு திறமையையும் பயன்படுத்தி பார்த்தான் முடியவில்லை.
மகள்: அப்புறம் என்னஆயிற்று?
தந்தை: சொல்கிறேன் கேள், அக்கினி உடனே தேவர்களிடத்துச் சென்று தன்னால் அந்த வைக்கோலை எரிக்க முடியவில்லை என்றதும் அவர்கள் அடுத்த பலசாலியான வாயுதேவனை அனுப்பினர். வாயுதேவனும் உடன் சென்று என்னை அனைவரும் 'மாதரிச்வா' என்று அழைப்பர் என்று கூறியதும், இயக்கன் உன்னிடம் என்ன சக்தி உள்ளது? என்று கேட்டான். சரி இங்கே இயக்கன் யார் சொல்லு பார்ப்போம்....
மகள்: பரமேஸ்வரன் அந்த நாராயணனே.... சரி தானே...
தந்தை: சரி வாயுதேவன் உலகிலுள்ள எல்லா பொருள்களையும் என்னால் தூக்கமுடியும் என்று சொன்னதும் இயக்கன் எங்கே இந்த வைக்கோலை கொஞ்சம் தூக்கு பார்க்கலாம் என்றான். வாயுதேவன் முழு சக்தியையும் உபயோகித்து பார்த்து தோற்றுப்போனான். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த தேவர்கள் மிகவும் குழம்பிப்போனார்கள் ஏனென்றால் தேவர்களிளேயே சக்திவாய்ந்தவர்கள் அக்னியும் வாயுவும் தான். அவர்களால் இந்த இயக்கன் கூறுவதை செய்ய முடியவில்லை, பயந்துபோன அவர்கள் உடனே இந்திரனிடம் போய் நடந்ததை சொன்னார்கள். இந்திரன் வியப்புற்று அந்த இடத்திற்கு விரைந்தான் ஆனால் அந்த இடத்தில் இயக்கன் மறைந்து உலகிலேயே மிகவும் அழகான பெண் ஒருத்தி நின்றுகொண்டிருந்தாள் அவள்தான் உமாதேவி என்னும் பராசக்தி....அவளிடம் சென்று வந்தது யார் என்று வினவினான். உடனே உமாதேவி வந்தது வேறுயாருமில்லை பரபிரம்மமே என்று விளக்கியவுடன் தன் அகங்காரம் ஆணவம் அனைத்தையும் விட்டொழிந்தான் இந்திரன் மற்றும் அனைத்து தேவர்களும். இதில் விளங்கும் உண்மை என்னவென்றால் பரம்பொருளை அறிய உண்மையான ஆத்மஞானம் பெற 'நான்' என்ற மனோபாவம் ஒழியவேண்டும். அகந்தை அறவே ஒழிந்தால்தான் பரம்பொருளின் அருள்கிட்டும். பிரும்மம் என்பது மிகவும் நுட்பமான ஊசி நுனியைப் போன்றது.
மகள்: ஆகா ஒரு சிறிய கதையில் இத்தனை தத்துவங்களா?
தந்தை: அந்த காலத்தில் வேதாந்தங்களை பரப்ப இதுபோன்ற சிறிய கதைகளை பயன்படுத்தினார்கள். அந்தகாலத்தின் ரிஷிகள்.
மகள்: இந்த கேனோபநிஷத் எந்த வேதத்தின் கீழ் வருகிறது.?
தந்தை: இது சாமவேதத்தை சார்ந்தது. இதன் முதற்சுலோகத்தில் சீடன் குருவிடம் நான்கு கேள்விகளை கேட்கிறான் 'எவரால்' என்று பொருள்படும் வடமொழி சொல்லான 'கேன' என்ற வார்த்தையுடன் இந்த உபநிஷத் ஆரம்பிப்பதால் இதற்கு கேனோபநிஷத் என்ற பெயர் வந்தது. பிரம்மத்தை பற்றி முழுமையாக அறிந்துகொள்ள இந்த உபநிஷத் உதவும்.
மகள்: அருமையப்பா.
தந்தை: பிறகொருநாள் கடோபநிஷத் பற்றி சொல்கிறேன். ஒரு அருமையான உபநிஷத் அது. நசிகேதனுடைய கதையும் அவன் யமதர்மராஜனுடன் உரையாடுவதும் தான் கடோபநிஷத்.
மகள்: சரியப்பா பின்னர் சந்திப்போம்....

4 Comments:

  • At 7:32 AM, Blogger Suba said…

    நல்ல முயற்சி. வேதங்களை எளிமையாக இப்படி அறிமுகப்படுத்துவது பாராட்டுதற்குறிய விஷயம்.
    நான் எனக்குத் தெரிந்த வகையில் வெதங்களின் சில பகுதிகளைத் தொட்டுப் பார்த்திருக்கிறேன், கட்டுரை வடிவில். நேரம் கிடைத்தால் வாசித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். (இணைமதி TSCII எழுத்துருவில் எனது www.subaonline.de வலைப்பக்கத்தில் http://www.subaonline.de/upani/listti.html பகுதியில் இருக்கின்றது)

     
  • At 8:47 AM, Blogger Koman Sri Balaji said…

    நன்றி சுபா. உங்களின் வலைப்பதிவை கண்டேன். அருமையாக உள்ளது. அதனை யூனிகோடில் வகைபடுத்தி இந்த பக்கத்தில் சேர்க்கலாமே. தொடர்ந்து படியுங்கள் கருத்தினை தெரிவியுங்கள்.

     
  • At 7:07 AM, Blogger Srikanth said…

    தங்களது முந்தய பதிவொன்றில் வேதம் ஆரம்பத்தில் ஒன்றாகவே இருந்ததாகவும்
    கலியுக மக்களுக்காக வ்யாசர் அதை பிரித்து ஜைமினி போன்ற தம் சீடர்களுக்கு
    உபதேசித்ததாகவும் எழுதக்கண்டேன்.

    இத்தகைய நிகழ்வு புராணங்களிலோ வேதங்களிலோ சொல்லப்பட்டிருக்கிறதா.. எதனால் தாங்கள்
    இப்படி சொல்கிறீர்கள்..

    ஏனெனில் த்ரேதாயுகத்தில் நடந்த ராமாயணத்தில் ராமர் ஆஞ்சநேயரை முதல் முறை பார்த்து பேசும்போது அவரைப்பற்றி லக்ஷ்மணரிடம் இப்படி சொல்வதாக வால்மீகி ராமாயணம் சொல்கிறது:

    ந அன்ரிக்வேத வினீதஸ்ய ந அயஜுர்வேத சாரிணா
    ந அசாம வேத விதுஷா ஷக்யமேவம் விபாஷிதம்

    அதே போல் துவாபர யுகத்தில் நடந்த மஹாபாரதத்திலும் பல இடங்களில் நான்கு வேதங்களைப் பற்றியும் பல இடங்களிலும் வருகிறது. மஹாபாரதத்தை இயற்றியவரே வ்யாசர் என்றாலும்
    நானறிந்த வரை வ்யாசர் என்பது இந்திரன் மாதிரி ஒரு பதவி.

    தவறாக எண்ண வேண்டாம். எனக்கு வந்த சந்தேகத்தை கேட்கிறேன் - அவ்வளவுதான்.

     
  • At 7:41 AM, Anonymous Anonymous said…

    Very good effort. Please continue this. Thanks.

     

Post a Comment

<< Home

 
Free Web Counters
Web Hit Counters

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது